Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

இன்பமான வாழ்க்கைக்கு

இரசனை வேண்டும்


வாழை மரத்தைப் போல வாழ்க்கையின் ஒவ்வொரு பாகங்களுமே மிகவும் இனிமையானது. சிறியவயதினில் அன்னைமடியினிலே துள்ளிதிரிந்த சிறார்கள் வளர்ந்தவுடன் தம் வாழ்க்கை துணையின் மனங்களிலே அலைமோதுகின்றனர். அந்த வாழ்க்கைத்துணை அமையும் விதம் தான் ஒவ்வொரு மனங்களையும் சுகமானதாகவும் சுமையானதாகவும் மாற்றுகிறது.

சிறுவயதினிலே அம்மா மடியினில் விளையாடும் போது உறவுகளுடன் சண்டை போட்டிருப்போம். சண்டைபோட்டு அழும்போது துன்பமாக இருந்தாலும் வயது கொஞ்சம் அதிகமானதும் அதை நினைத்து பார்த்து அந்த உறவோடு சேர்ந்திருந்து சேர்ந்து சிரிக்கும்போது சின்ன வயதில் சண்டைபோட்டபோது இருந்த துன்பம் கானல் நீராக தெரியாமல் போகிறது.

அதுமாதிரிதான் பாடசாலைக்காலங்களிலும் சில நண்பர்களுடன் சண்டைபோட்டு கடைசிவரை பேசாமல் இருந்துகொண்டிருப்போம். ஆனால் அதை நினைக்கும்போது எங்களுக்கே வெட்கமாக இருக்கும். இந்த அற்பத்தனத்திற்காகவா சண்டைபோட்டோம் என்று. இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு பருவங்களும் மிகவும் இனிமையானதாகவே அமைகின்றது. நாம் அதை துன்பமாக நினைத்து துன்பப்படுகிறோமே தவிர இன்பமாக எடுப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் இன்பமாக நினைக்க நாம் பழகிக்கொள்ளும் பொழுது நாம் பெருந்தன்மை உடையவராக மாற்றமடைகிறோம். இதனால் எம் மனமும் நாமும் மேன்மையடைகிறோம்.

ஒரு மனிதன் எப்போது பூரணமாகின்றான் என்றால் உலகை முற்றாக அறியும் பொழுது, "கற்றுமற" என்று கூட சொல்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொள். நீ கற்றவற்றில் எது உனக்கு பிடித்திருக்கிறது,உன் வாழ்க்கைக்கு எது நல்லது, இப்படி இருந்தால் எப்படி இருக்காலாம்! போன்ற கேள்விகளை மனதிற்குள் எழுப்பி தூங்கிகொண்டிருக்கும் மனதை தட்டி எழுப்ப வேண்டும். அதன் பிறகு பிடிக்காதவற்றை மறந்து பிடித்தவற்றை வாழ்க்கையில் தொடரவேண்டும். இவ்வாறு தனக்கு பிடித்தவற்றை இனங்கண்டு சமூகத்திற்கு முன்னோடியான மனிதனாக ஒருவன் திகழும் போதே அவன் பூரணமடைகிறான்.

காதல் என்பது துன்பமாக அமைவதற்கும் இன்பமாக அமைவதற்கும் காரணம் நாம் தேர்ந்தெடுக்கும் நபரை மட்டும் சார்ந்திருக்காது, மாறாக எமது வாழ்க்கை சூழல் கூட ஒரு காரணமாக அமைகிறது. பிள்ளைகளின் விருப்பங்கள் பெற்றோரின் விருப்பங்களுடன் ஒன்றாக கலக்கும் போதே அது சுகமாக மாறுகின்றது. இல்லாவிடில் அது சுமையானதாகவே தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் சுமையை சுகமானதாக மாற்றும் பொறுப்பு இருசாராருக்கும் இருக்கும் பட்சத்தில் பெற்றோரை சமாளிக்கும் பொறுப்பு பிள்ளைக்கே உள்ளது.

எனவே, பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் சுமைகளையும் சுகமாக மாற்றி இன்பமான வாழ்க்கை வாழ நம்மை நாம் மாற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எம்மால் இயன்றவரை நாம் எல்லோரும் நல்லவர்களாக வாழ்ந்து எமக்கும் எம் சமூகத்துக்கும் நல்ல பெயரை ஈட்டி கொடுப்போமாக.

கைதுறப்பு