Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

போரிற்கு பிற்பட்டகாலம்

உலக நாடுகளின் கற்பனைக் காலம்


கசாப்பு கடையில் உள்ள ஆடுகளைப்போல தமிழீழத்தமிழர்கள் இருக்கும் இவ்வேளையிலே, போரை நிறுத்துவதற்கோ அல்லது இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவோ முடியாத உலகின் மிகப்பெரிய நாடுகள் இன்று போரிற்கு பின்னதான காலம் விடுதலைப்புலிகளுக்கு பிற்பட்ட காலம் என கதை பேச ஆரம்பித்திருக்கிறது. சர்வதேசளவில் உள்ள அறிவாளர்களுக்கு மத்தியில் இதற்கான முடிவை சொல்லுமளவிற்கு அறிவு தகுதி
இல்லாவிடினும் தமிழீழத்து மக்களில் ஒருவர் என்ற ரீதியிலே உலகத்துக்கு உறுதிபடுத்த விரும்புவது ஒரே ஒரு விடயம் தான்.

என்னவென்றால், போரிற்கு பிற்பட்ட காலம் எனும் பொழுது தமிழீழத்தில் உள்ள பெரும்பாலான எமது உறவுகள் மண்ணிலே விதைக்கப்படுவார்கள். இலங்கை அரசாங்கப்பகுதியில் உள்ள உறவுகளில் சிலர் இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் பிடித்து செல்லப்பட்டு சிறைச்சாலைகள் சிலரும் கொலை செய்யப்பட்டு உடலங்களாக வீதியோரங்களில் சிலரும் வீசப்படுவார்கள். பெரும்பாலான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் காரணமாக காலப்போக்கில் அவர்கள் கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுப்பார்கள். மற்றும் பலர் வீடுவீடாக சிங்களக்காடையர்களால் இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்படுவார்கள்.

அப்படி இருக்கும் பொழுது போரிற்கு பிற்பட்ட காலம் என்றால் வெளிநாடுவாழ் புலம்பெயர் தமிழர்கள் தான் அங்கு சென்று வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வாழ்வதற்கான சூழல் எனும்பொழுது தான் விடுதலைப்புலிகளிற்கு பிற்பட்ட காலம் என்பதை நோக்க வேண்டி இருக்கிறது. விடுதலைப்புலிகளிற்கு பிற்பட்ட காலம் எனும் பொழுது அப்படி ஒரு காலம் சாத்தியமற்றது. ஏனெனில், இவ்வளவு காலமாக நாம் பட்ட துன்பம் எம் எல்லோரினதும் நெஞ்சில் பதிந்திருக்கும். அதன் விளைவாக ஒரு விடுதலை தீ ஒவ்வொரு தமிழனுக்கும் உருவாகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அவ்வாறு அந்த விடுதலைத்தீயை வெளிக்கொண்டுவரமுடியாத பட்சத்தில் ஆரம்பகால கட்டத்தைப்போல் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை வரும். தமிழ்மக்களாகிய நாம் ஒருபொழுதேனும் இன்னொருவருக்கு அடிமையாக வாழவிரும்பாதவர்கள். சுதந்திரமாக செயற்பட ஆசைப்படுவர்கள். அப்படியான ஒரு இனத்தை ஆயுதத்தைக்காட்டியோ, சட்டத்தின் மூலம் சிறைச்சாலையை காட்டியோ அடிமையாக்க முடியாது.

இன்று எமக்கு கிடைத்த தலைவர் போல் இனி எமக்கு ஒரு தலைவர் கிடைப்பாரோ என்பதில் கூட எமக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில் ஈழத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழீழத்தாகம் தானாகவே ஏற்படுகிறது. அந்த தாகத்தையும் அதனால் ஏற்படும் வீரத்தையும் ஊட்டி வளர்த்தவர் எம் தேசிய தலைவர்.

அதை விட ஒரு முக்கியமானது என்னவென்றால் உலக நாடுகள் கூறும் விடுதலைப்புலிகளிற்கு பிற்பட்ட காலம் என்று அவர்கள் கூறுவது தலைவரிற்கு பிற்பட்டகாலம் என்பதையே. ஏனெனில் எந்த நாட்டுக்கும் எந்த ஒரு விடயத்திற்காகவும் அடிபணியாது எமக்காக எம் தமிழ் இனத்திற்காக தன்னையே அர்ப்பணித்த அந்த உத்தமர் மாதிரி ஒருவர் இவ்வுலகில் வாழ்வது கடினம். இதனாலேயே உலகநாடுகள் இப்படி கூறுகின்றன. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் இவர் ஒருதருக்கும் அடிபணிய மாட்டார் என்பது. இதற்காகவே தான் இன்று உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு தடை செய்யப்பட்ட கிளாஸ்ரர் குண்டுகளிலிருந்து எல்லா உதவிகளையும் செய்து வருகிறது இந்தியா உட்பட.

வல்லரசு நாடான இந்தியா ஒரு காலத்தில் இலங்கையரசாங்கத்துக்கு இந்தியராணுவ உதவி செய்து அதன் மூலம் தமிழமைப்புக்களால் தோற்றகடிக்கப்பட்டு மீண்டும் இந்தியா வந்தது. இதனால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக இன்று மீண்டும் களம் இறங்கியுள்ளது. அந்த பழிதீர்ப்பிற்காகவே தான் தீர்வே இல்லாத தாம் செய்த ராஜீவ் கொலையை வைத்து இன்று எம்மக்களை அழிக்கின்றனர். அந்த கொலையை நிரூபித்தால் தம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக இந்தியா பிளவு பட்டுவிடும் என்பதற்காக அந்த பழியை திசைதிருப்பி தமிழ் இனத்தை அழிக்கிறார்கள்.

எனவே, சொல்ல வந்தது என்னவெனில் போரிற்கு பிற்பட்ட காலம் என்றோ விடுதலைப்புலிகளிற்கு பிற்பட்ட காலம் என்றோ ஒன்று இருக்காது என்பது தான். தமிழீழத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாகி விடுவானோ என்ற அச்சத்தில் தான் இலங்கை அரசாங்கம் அங்குள்ள இளைஞர் யுவதிகளை கடத்தியதும் அதானால் அவர்கள் நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்ததும் இன்று கருக்கலைப்பு செய்வதும் கற்பினித்தாய்மார்களை வயிறு பார்த்து சுடுவதுமாக எம் இனத்தை அழித்து வருகிறான்.

ஆனால் தமிழீழத்தமிழன் என்றொருவன் உலகில் இருக்கும் மட்டும் தமிழீழம் என்ற தாகம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தலைவர் இருந்துகொண்டே தான் இருப்பார். எனவே, இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் தூண்டுதலால் உலக நாடுகளுக்குள் இருக்கும் பிற்பட்ட காலம் என்பது அவர்களின் வெறும் கற்பனையே.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு