30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து
வரை நடை பெற்றது. அப்போராட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் ஆரம்பித்தும் நிறைவு செய்தும் வைத்தார்.தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் நான் மதியம் ஒன்று முப்பது அளவிலேயே கலந்து கொண்டேன். நான் போகும் போது யார் பேசிக்கொண்டு இருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஈழத்திற்கு வந்து வந்தவர் என்பதை அவரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். பேச்சுக்கள் மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒவ்வொருவரின் பேச்சின் மூலம் அந்த அவையிலே நாம் ஒரு தன் மானத்தமிழர்களாக சித்தரிக்கப்பட்டோம். உண்ணமையில் அந்த உணர்வு அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தாலும் எம் தேசிய தலைவரின் நிலைமாறாத,தைரியமான மனதால் தான் அந்த பெருமை அவர் மூலமாக எமக்கு கிடைத்தது. உண்மையில் அந்த பேச்சுக்கள் அனைத்தும் எம் தலைவருக்கே உரித்தாக வேண்டியது. அவரின் சார்பாக உயிருக்கு பயந்து ஓடிவந்திருக்கும் நாம் பெற்றுக்கொண்டோம்.
உண்மையில் தமிழீழத்தில் பிறந்த காரணத்தினால் தான் இன்று நாம் உயர்ந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறோம். அதுவும் எம் தலைவர் வழியில் வந்தவர்கள் என்பாதல் தான் என்பது அப்போராட்டத்தின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். என் மனதில் தோண்றிய இப்போராட்டத்தின் மூலம் நான் உணர்ந்து கொண்ட படித்துகொண்ட பாடம் தான் இது. அந்த விதத்திலே இப்போராட்டம் எனக்கொரு பாடசாலையாக திகழ்ந்தது. இனி போராட்டத்தில் பேசியவற்றில் நினைவிலிருப்பதை சொல்கிறேன். அங்கு பேசிய ஒவ்வொருவருமே என் அண்ணன் பிரபாகரன் எம் தலைவர் பிரபாகரன் என்று பேசியதை செவிகளை இனிமையாக்கியதுடன் கரவோசங்களும் பிரமாதமாக இருந்தது. என்னதான் சட்டங்களுக்கு பயந்தாலும் எம் மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எம் தலைவர் இருக்கிறார் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன். அந்த பேச்சின் போது கூடுதலாக எல்லோரும் சிங்கள இராணுவம் பெண்களை செய்யும் கொடுமைகளை சுட்டிக்காட்டினர். அதாவது சோதனைச்சாவடிக்கு பன்னிரண்டு மீற்றருக்கு முன்னதாகவே உடுப்புகளை களைந்து விட்டு வரவேண்டும் என்றும் அப்படி வரும்போது அதில் யாரையாவது அங்கிருக்கும் இராணுவத்திற்கு பிடித்தால் அவர்களை அனுராதபுரத்தில் உள்ள இராணுவத்தினருக்கான விபச்சார விடுதிக்கு அழைத்து சென்று நிரந்தர விபச்சாரிகளாக்குவதாகவும் (இங்கு குறிப்பிட வேண்டியது இது
வரையில் தமிழ் பெண்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை என்பது) கூறினார்கள். இதனால் கோபமடைந்த ஒருதர் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டிய விதம்"சிங்கள நாய்களே உங்களுக்கு பெண்களை நிர்வாணமாக பார்க்க வேண்டுமானால் உங்கள் அம்மாவை அல்லது சகோதரிகளையோ அல்லது சிங்கள பெண்களை பாருங்கடா. ஏன் எங்கள் உறவுகள் மீது கைவைக்கிறீர்கள் என்று கூறிவிட்டு சிங்கள பெண்களே என்னை மன்னித்து கொள்ளுங்கள்.
ஆனால், உங்கள் ஆண்பிள்ளைகளை, கணவன் மார்களை, சகோதரர்களை தண்டிக்காத நீங்களும் குற்றவாளிகளே!" என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் வீரப்பன் தொடரை இயக்கிய இயக்குனர் கௌதம் பேசும்போது ஈழமக்களின் நிலையை நான் ஒரு படமாக எடுத்து உலகுக்கு காட்டுவேன். என்று கூறினார். திருச்சி வேலுச்சாமி அவர்கள் பேசும் போது "21.05.1991ம் ஆண்டு இரவு 10மணிக்கு ராஜீவ்காந்தி கொலை இடம்பெற்றபோதும் அடுத்த நாள் காலை அதாவது 22.05.1991 அன்று ஒன்பது மணிக்கே அவ்விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பே அக்கொலையை பிரபாகரன் தான் செய்தார் என்று சுப்ரமணியசுவாமி அறிவித்ததாக பத்திரிகைகள் எல்லாம் பிரசுரித்ததை சுட்டிக்காட்டினார். விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே சுப்ரமணியசுவாமி முடிவு எடுப்பது எப்படி? அப்படி அவர் முந்தியதற்கு காரணம் அந்த கொலைக்கும் இவருக்கும் தொடர் இருப்பதால் தான்"என்று கூறினார். அதை விட ஒன்று கூறினார் "30 வருடங்களாக நான் காலையில் 11மணிக்கும் இரவில் பத்து மணிக்கும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் 27.04.2009 அன்று தான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது 30 வருடங்களாக நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன் என்று" என குத்தலாக ஒரு நகைச்சுவை சொன்னார்.
பின்னேரப்பொழுதில் வந்த கவிஞர் தாமரை முதலில் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார். "இந்த போராட்டத்தில் முழுநேரமும் தான் கலந்து கொள்ளாததற்கு தன் உடல்நிலை
சரியில்லாதது தான் காரணம் ஆனாலும் எப்படியாவது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக மன்னிப்பு கேட்டார். அத்துடன் உங்களை இங்கு மட்டுமல்ல போர்
சூழ்நிலையிலும் கூட உங்களை உங்கள் மண்ணில் நான் சந்தித்திருக்கிறேன் என்று கூறினார். அத்துடன் ஈழத்தமிழர்களை பார்த்து நீங்கள் மட்டும் தான் அடிமைகள் என்று நினைக்காதீர்கள் நீங்கள் அடிமையை எதிர்த்து போராடுகிறீர்கள். நாங்கள் அடிமைகள் என்று தெரியாமலே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அடிமைகள் என்றார். அதைவிட உங்களை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடுவதற்கு உங்களுக்கு நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார். எங்களுக்கு அப்படியான ஒருவர் தலைவராக கிடைக்கவில்லை. அதனால் தமிழீழத்த்துக்கு மட்டுமல்ல தமிழினத்துக்கே தலைவர் அண்ணன் பிரபாகரன் தான் என்று உரத்து கூறினார். ஈழத்தில் எங்கள் உறவுகள் அடிமையை எதிர்த்து போராடுவதால் தான் இன்று
தமிழன் என்று தலைநிமிர்ந்து எங்களால் வாழமுடிகின்றது என்று எங்கள் தேசியத்தலைவரையும் அவரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும் பற்றி கூறினார்.
அதுமட்டுமன்றி தமிழக அரசியலின் உண்மைத்தன்மையை கூறினார்
எப்படி என்றால், "முதன் முதல் கலைஞர் கருணாநிதி அவர்கள்
ஈழத்தமிழர்கள் பற்றி பேசும் போது செல்வி ஜெயலலிதா
கடுமையாக எதிர்த்தார். போர் நடந்தால் மக்கள் இறப்பார்கள் தான்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்" உண்மை என்னவெனில்
சோனியாவே மௌனமாகத் தான் சாதிக்கிறார். ஜெயலலிதா
விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவுக்கு
அனுப்பவேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா பேசினார். அவ்வாறு
அவர் பேசியதற்கு காரணம் கலைஞர் ஈழத்தமிழர்களிற்கு சார்பாக
பேசுவதால், தான் எதிராக பேசினால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி
அமைக்கலாம் என்ற அரசியல் நோக்கம். அதை முற்றிலும் அறிந்த
கலைஞர் தன் பதவியை பாதுகாக்க மௌனம் காத்தார் காக்கிறார்.
அது ஒரு பக்கம் இருக்க அந்த அரசியல் திட்டம்
வெற்றியளிக்காததால் தற்போது மாறி நிற்கும் ஜெயலலிதாவை பற்றி
பேசும் போது சொன்னார்" ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையில்லாத ஜெயலலிதாவே இன்று தமிழீழம் தான் தீர்வு என்பதையும் மீறி நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழம் பெற்றுக்கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே. கலைஞர் அவர்களே! படுத்துகொண்டு ஜெயிக்க நான் உங்களுக்கு ஒன்று சொல்லித்தாறேன் கேளுங்கள்
நீங்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. படுத்துக்கொண்டே சொல்லுங்கள் மத்தியரசுக்கு இலங்கைக்கு நீங்கள் இந்தியராணுவத்தை அனுப்புகிறீர்கள். தமிழீழத்துக்கு நான் தமிழக இராணுவத்தை அனுப்ப போகிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம் என்று சொன்னார்.
நிறைய பேசினார் எனக்கு அந்தளவுக்கு நினைவாற்றலில்லாததால் நினைவிலிருந்ததை எழுதியிருக்கிறேன். சில பேச்சாளர்கள் பேசும்போது யாரென்று எனக்கு தெரியாது உங்கள் கைவிரல்களால் கையை கவிழ செய்யுங்கள் என்றெல்லாம் கூறும்பொழுது தேர்தல் பிரசாரம் போலவும் தோண்றியதுடன் எங்களுக்கு தேர்தலுக்கான அனுமதியில்லை என்பதை நினைவு படுத்தியது. அத்துடன் அங்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலும் கறுப்பு மேலாடை அணிந்திருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் பெரியார் திராவிடக்கழக உறுப்பினர்கள் என்று தெரிந்தது. சிலரின் சட்டையில் தேசியத்தலைவரின் படம் குத்தப்பட்டிருந்தது. மக்கள் எல்லோரும் ஈழத்தில் இடம்பெற்ற கொடுமைகளின் பதாகைகளை கையில் ஏந்தியவண்ணம் இருந்தோம். இடைஇடையே சாக்கடை நாற்றம் எம்மை தொட்டு விட்டு சென்ற போது எம் துப்பட்டாக்கள் பெரிதும் உதவியாக இருந்தது. பேருந்தில் போகிறவர்கள் எல்லாம் எம்மை பற்றி ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள் என்பதிலிருந்து நிறைய மக்களுக்கு தமிழீழம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
போராட்டத்தை நிறைவு செய்யும் பொருட்டு தமிழீழ மக்கள் சார்பாக கோரிக்கைகள் முன்வைக்க பட்டதுடன் தமிழக அகதிமுகாமில் நாம் படும் துயரையும் கூறினார்கள். இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அகதிமுகாமில் வசிக்கும் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அதனால் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. சிலரே வருகை தந்தனர் அவர்கள் வேறு எங்கோ போவது என்று சொல்லி வருகை தந்தார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. மற்றும் கலைஞர் அவர்கள் எங்களிற்கு உதவி செய்தார். அவரை நாங்கள் மறக்கமாட்டோம். ஆனால், எம் உறவுகள் கொல்லப்படும்போது மௌனம் காப்பது ஏமாற்றம்
அளிப்பதாக கூறினார்.அகதி முகாமில் வசிக்கும் எமக்கு ஒருமாதத்திற்கு 70 ரூபாய் கொடுப்பதிலிருந்து கலைஞர் அவர்கள் உயர்த்தி தற்போது இரண்டு வாரத்திற்கு 70 ருபாய் கொடுக்கிறார்கள். அத்துடன் முகாமிலிருக்கும் எங்களை வெளியில் வேலைக்கு போவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை என்றும் ஒருமாதத்திற்கு 140ரூபாய் எங்களிற்கு எதற்கு போதும் என்றும் எங்களை வெளியில் வேலை செய்ய அனுமதித்தால் உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை என்றும் எம் பிள்ளைகளிற்கு பாடசாலையில் கல்வி
கற்பதற்கு அனுமதி இல்லை என்றும் அதனால் எம் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிருப்பதாகவும் கூறினார். அப்படி அடிப்படை வசதியில்லாத பாடசாலையில் எம் பிள்ளைகள் படித்தாலும் கல்லூரி படிப்பிற்காக 50 இலட்சம் கேட்பதாகவும் வேலை இல்லாமல் இருக்கும் நாங்கள் 50 இலட்சத்துக்கு எங்கு போவது என்றும் மனவேதனையுடனும் குறிப்பாக அவர் அழுது கொண்டு கூறிய போது தான் நாம் படும் அவலம் எமக்கு தெரிந்தது.
பின்னர் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் போது மாவீரன் நெடுமாறன் ஐயா அவர்கள் பேசும் போது தமிழ் மண்ணில் இருக்கும் போது நீங்கள் எவரும் அகதிகள் இல்லை என்று பேசினார். அவர் அப்படி பேசினாலும் நிஜம் என்று பார்க்கும்போது நாம் இருப்பது அகதிமுகாமில் தானே. அவ்வாறு இருக்க! யார் செய்யினும் குற்றம் குற்றாமே எனும் எனது நோக்கில் நான் ஆராயும் போது சிலரது பேச்சுக்கள் அரசியல் சார்ந்த தேர்தலை நோக்கியதாக இருந்தது. அப்படி இருப்பினும் தமிழீழத்தமிழர்கள் சார்பில் பேசியவர் எமது குறிக்கோளை மட்டுமே முன்வைத்தது எம் இனத்தின் நற்பண்பான "நன்றி மறப்பது நன்றல்ல.. நன்றல்லது அன்றே மறப்பது நன்று" எனும் பண்பை காட்டியது தமிழீழத்தமிழர்களை மேன்மக்களாகவே சித்தரிச்சிருக்கும் என நம்புகிறேன். இப் போராட்டம் பற்றி எம்மக்கள் பலருக்கும் தெரியாது ஒரு காரணம் தெரிந்தும் வரமுடியாது இருந்தவர்கள் அகதிமுகாமில் வசிக்கும் எம் உறவுகள். இன்னும் சிலர் எப்படியென்றால் இந்த போராட்டத்திற்கு தாம் வருகைதந்தால் மீண்டும் இலங்கைக்கு போகமுடியாது என்றும் வெளிநாட்டு விசாக்காக காத்திருப்பவர்கள் வீடியோவில் தங்கள் முகம் தெரிந்தால் தமக்கான விசா மறுக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்ததாக கூறினார்கள். அப்படியானவர்களுக்கு இப்போராட்டம் பற்றிய முழு அறிவு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் நாம் செய்த போராட்டம் எம் மக்களை சிங்கள் இனவெறியனிடம் இருந்து காப்பாற்றுமாறு இந்தியரசிடம் கோரியே தவிர ஆயுதம் ஏந்தி போராடவல்ல என்பதை அவர்கள் முழுமையாக உணரவேண்டும். எமது போராட்டம் வெற்றியளிக்குதோ இல்லையோ அது அடுத்த பிரச்சனை. நம் நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? தற்போதைய நிலையில் எம்மால் என்ன முடியும்? அதை ஒற்றுமையாக தமிழன் என்ற உணர்வோடு செய்ய இனிமேலாவது செய்ய முன் வருவோம். ஏனெனில் இன்று எம்மக்கள் இவ்வாறாக அவலப்படுவதற்கு முக்கிய காரணம் தலமையின் கீழ் நாம் ஒற்றுமையில்லாமல் செயற்பட்டதே! இன்று உலகமே வியக்கும் தலைவரை நாம் வைத்து கொண்டு எம் ஒற்றுமை இன்மையால் தமிழீழத்தை இழக்க முடியாது. எவ்வளவோ வலிகளுக்கும் இழப்புக்களுக்கு பிறகும் தன் கொள்கையில் மாற்றம் இல்லாது எமக்காகவே எம் தலைவர் போராடுகிறார் என்பதை எல்லோரும் மனதில் நிறுத்தி கொண்டு போராடுவோம்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்