Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

அன்னையர் தினம்

பெண்களுக்கான தினம்

ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக இருக்கும் அன்னைக்கும் அன்னையர் தினம் கொண்டாடவேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், அதை தனிய ஒரு கடமையாக மட்டும் எடுத்து கொண்டு முதியோர் இல்லத்தில் இருக்கும் அன்னைக்கு நாங்கள் குடும்ப சகிதம் சென்று பூக்கொத்து கொடுப்பது நாகரீகத்திலுள்ள ஒரு அநாகரீகம் என்றே நான் கருதுகிறேன்.

அந்த பூங்கொத்து கொடுக்காவிட்டாலும் தன் அன்னையை தன்னுடன் அன்பாக அரவணைச்சாலே அந்த அன்னைக்கு நாம் செய்யும் அன்பு. உண்மையில் அன்னையர் தினத்தினூடாக நான் சொல்லவருவது என்னவெனில், எம்மை பெற்றெடுத்த எம் பெற்றோர்களுக்கோ அல்லது உறவுகளுக்கோ எதையும் கடமைக்காக செய்யாதீர்கள். ஏனெனில் மனதில் அன்பு இல்லாமல் ஏனோ தானோ என்று செய்வதால் எமக்கும் நன்மை இல்லை. அதை ஏற்றுக்கொள்வருக்கும் அதனால் எந்தவித நன்மையும் இருக்க போவதில்லை.

எனவே, மனதில் அன்போடு எதையும் செய்ய முன்வரவேண்டும். கருத்து முரண்பாடுகள் வரலாம். அதனால் அன்பு ஒரு போதும் குறையப்போவது இல்லை. எம்மை பெற்றெடுத்த எம்மை இந்த உலகுக்கு காட்டிய எமக்கு உலகை காட்டிய அந்த உறவுகளை வைத்திருந்து அன்பை மட்டுமே அவர்களுக்கு கொடுப்பதில் எமக்கு ஒரு சிரமமும் வரப்போவதில்லை. என்ன இன்று எனக்கு அம்மாவாக இருப்பார் அறிவுரைகள் சொல்லுவார். நாளை வயது முதிர்ந்தவுடன் நினைவாற்றல் குறைவதால் அவர்கள் எமக்கு பிள்ளைகள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு நாம் அறிவுரை கூறவேண்டும்.

உலகம் எப்படி சுழல்கிறதோ இன்பம் துன்பம் எப்படி எம் வாழ்க்கையை தொட்டுவிட்டு செல்கிறதோ அதே மாதிரி அதுவும் ஒரு இயல்பான மாற்றங்கள்.இந்த நேரத்தில் இந்த காலத்தில் சொல்லவேண்டிய இன்னுமொன்று என்னவெனில், மாமியார் மருமகள் பிரச்சனை. என்னை பொறுத்தவரை இதை ஆராய்கிறளவுக்கு எனக்கு அனுபவமில்லை. ஏனெனில் தமிழீழத்தில் இப்படியான எந்தவித பிரச்சனையும் இருப்பதில்லை. தற்பொழுது கடந்த இரண்டு
வருடங்களாக சில அனுபவங்களை ஊடகங்களினூடகாக பெற்றுள்ளேன். அதனால் கூறுகிறேன். எனக்கு மாமி. இன்னொருவருக்கும் அவர் அம்மா. மாமி என்று பெயர் தான் சொல்கிறோமே தவிர அவரும் எம் அம்மாவை போன்ற ஒரு வயசானவர் தானே! (வயசானவர் என்பது எம்மைவிட வயதானவர் என்ற கருத்து).அதை ஏன் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க தவறிவிடுகிறோம்!

நவீன காலத்தில் ஒரு பிரதான தவறு என்றே கூறலாம் என்னவெனில், படிப்புத்தகுதி. படிப்பது தவறு அல்ல அதை நாம் பயன்படுத்தும் விதம் தவறு. சில இடங்களில் வயதானவர்கள் இளையவர்களின் கீழ் வேலை செய்யலாம். அது இளையவரின் சூழல் வயதானவருக்கு கிடைக்காது போனதால். ஆனால், வேலையில் மட்டும் தான் அவர் உங்களிற்கு கீழ் உள்ளார். அவருக்கு இருக்கும் பல்வேறுவிதமான அனுபவறிவு இளையவர்களுக்கு இருக்காது. இப்போ நாம் ஒரு கணக்கை அதற்கான கருவி மூலமோ அல்லது புத்தகத்தில் எழுதி பார்ப்பதன் மூலம் விடை கொடுக்கிறோம். அதே ஒரு வயதானவர் உடனடியாக சொல்வார். மழை வரப்போகுது என்பதை நாம் ஊடகங்களின் செய்திகள் வாயிலாக அறிவோம். ஒரு வயதானவர் மேகத்தை
பார்த்து சொல்வார்.

படிக்கவில்லை என்றதற்காகவும் எம்மக்கு கீழே வேலை செய்கிறார் என்பதற்காகவும் அவரை நாம் அவமதிக்க கூடாது. அப்படி நாம் அவமதிக்கும் பட்சத்தில் தான் இந்த ஆணவம் எமக்குள் தலை தூக்கும் போது தான் இன்று இந்த நாகரீக உலகில் மாமியர் மருமகள் பிரச்சனையும்,விவாகரத்துக்களும் அதிகமாகின்றது. எனவே, இயன்றளவு சிறியவர்களாகிய நாம் எல்லாவற்றையும் உணர்ந்து இசைந்து வாழ எம்மை தயார்படுத்திகொள்ள வேண்டும்.

ஏன் அன்னையர் தினம் என்ற தலைப்பில் இவற்றையெல்லாம் சொன்னேன் என்று யோசிக்கலாம்! நான் என்ன கருதுகிறேன் என்றால் முதல் சொன்னது தான் எனது அம்மாவையோ, மாமியையோ முதியோர் இல்லத்தில் வைத்துகொண்டு அன்னையர் தினம் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அதனால் அவர்கள் மனம் சந்தோசப்பட போவதுமில்லை. அங்கு போகும் போது ஒரு உடுப்பு போட்டு கொண்டாட்டம் போல் மற்றவர்களுக்கு காட்டுவதால் நாம் தான் சந்தோசப்படுகிறோமே தவிர அவர்கள் மனதில் கவலைப் படுவார்கள் என் பேரப்பிள்ளையை என்னால் பராமரிக்க முடியவில்லையே என்று. எனவே, எதையும் கடமைக்கு செய்யாதீர்கள். மனதில் அன்போடு செய்யுங்கள். வருடம் முழுவதும் அன்னையை
சந்தோசப்படுத்துங்கள். அதன் பின் அன்னையர் தினத்தை கொண்டாடுங்கள். அன்னையர்களும் பிள்ளைகளுக்கு ஒத்துழையுங்கள்.
குறிச்சொற்கள்:
கைதுறப்பு