உணவளித்த கரத்துக்கு
உணவளிக்க யாருமில்லை

இக்கட்டான காலகட்டத்தில்
இரங்கி உணவளித்த
இனிய என் உறவு - இன்று
இன்னல் பட்டு தவிக்கிறது மெனிக்பாமில்..
உணவு உண்ணாததால் கோமா எனும்
உளவு நோயில் சிக்கி
உறக்கமின்றி தவிக்கும் - ஊரின்
உறவுக்கு உதவிக்கரம் நீட்ட
உள்ளன்பு நினைக்கிறது..
உலகமோ மறுக்கிறது..
மந்தைகளைப் போல மானிடமொன்று
மானிடத்திற்கான அடிப்படை வசதிகளற்ற
மரணத்தின் வாசலில் வாழும் காலம் தான் கலியுகமா?
மன்னிக்காது மானிடம்
மான்புமிகு தலைவர்களே உங்களை.
ஐக்கிய நாடுகள் சபையாம் அதுக்கொரு பாதுகாப்பு சபையுமாம்
ஐயகோ!, எங்கே தான் இருக்கிறது?
வீதியோரங்களும் நடைபாதைகளும்
வீசியிருக்கிறது தமிழர் நம் உடல்கள்.
தமிழர்களின் குருதியதில் வீதிகள்
தாராளமாக போடப்படுகின்றன இலங்கையில்.
அநீதிக்கு விலைபோகும்
அர்த்தமில்லா உலகினில்
நீதிக்கு போராடியதால்
நிர்க்கதியாய் நிற்கின்றோம்
தமிழர்கள் தான் நாம்..