நீங்களும் கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன் என்று நான் எதை சொல்ல வருகிறேன் என்றால் நாம் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று இந்த மாமியார் மருமகள் பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு மாமியார் வயதில் பெரியவர் என்றதால் புதுசாக கல்யாணம் செய்யும் பெண்கள் தான் ஒத்துழைச்சு போகணும் எனும் கருத்து பெரும்பாலும் எல்லோருடைய மனசிலும் உலாவரும். அது உண்மையாக இருந்தாலும் பெரியவங்களும் அது சின்னப்பிள்ளை அறியாமல் செய்திட்டாள் நாங்கள் கொஞ்சம் அறிவுரை சொல்லி கொடுப்போம் என்று நினைத்து சொல்லி கொடுக்கலாம் தானே!
ஏன் எனக்கு இச்சிந்தனை வந்தது என்றால், தினமும் பேருந்தில் போகும் போது பலவிதமான, பலவயதுள்ள மனிதர்களை சந்திக்கின்ற பெரும் பாக்யம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவரின் பழக்கவழக்கத்துடனும், திருக்குறள் போன்ற போற்றதகுந்த பெரியார்களின் சிந்தனைகளுடனும் என் பழக்கவழக்கத்தை ஒப்பிட்டு பார்ப்பது என் வழக்கம். பேருந்தில் போகும் போதும் இவ்வாறான என் செயற்பாடுகள் என்னை அறியாமலே நடந்து கொண்டிருக்கும்.
பேருந்தில் ஏறினால் யுவதிகளை விட, ஏன் இளைஞர்களை விட முதியோர்களின் அட்டகாசம் தான் அதிகம். ஒரு சிலருக்காக எல்லோரினதும் மனசை நோகடிக்க நான் விரும்பவில்லை. ஆனாலும் பெரும்பாலான முதியவர்கள் விடாப்பிடியான குணமும் அன்புகாட்டாதவர்களாகவும் முக்கியமாக புரிந்துணர்வு அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி பெரியவர்கள் இருக்கும்போது அவர்களை பார்த்து வளரும் குழந்தைகளை தவறு சொல்லி திட்டுவதில் என்ன பலன்!
பேருந்தில் நடந்த சம்பவம் ஒன்று பேருந்தில் ஏறியதும் இருக்கை கிடைப்பது மிகவும் அரிது. மாறாக கூட்டம் அதிகமாக இருப்பதே வழமை. அந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் வேலைக்கு போகிறவர்களிடம் பொதுவாக இரண்டு பைகள் இருக்கும் ஒன்று சாப்பாடு எடுத்துகொண்டு போவது மற்றையது பணம் சம்மந்தமான பொருட்கள் வைப்பதற்கு. இது இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு பேருந்தில் நிற்பது மிகவும் கடினமாக இருப்பதால் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு நிற்பது இயல்பு. அதை நினைவில் கொண்ட நானும் ஒருநாள் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் என் பையை வைத்திருக்க கொடுக்க அவர் தனக்கு தெரியாத மாதிரி முகத்தை திருப்பிக் கொண்டு உட்காந்தார். உடனே பக்கத்தில் இருந்த பிள்ளை அதை வாங்கி வைத்திருந்தார்.
இதுமட்டுமல்ல பிறிதொரு தருணத்தில் ஒரு வயதான அம்மா உட்காந்திருக்க எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பிள்ளை ஒரு பையை வைத்திருக்க கொடுத்த போது அந்த அம்மா தன் பாட்டுக்கு ஏதோ திட்டிக்கொண்டிருந்தார்."ஏன் உனக்கு இதை வைச்சிருக்க முடியல்லையோ? உன் பாக்கை வைச்சிருக்கவா நான் இருக்கன்" என்று ஏதேதோ எல்லாம் சொன்னார். என் கேள்வி என்ன என்றால் இப்படியானவர்களுடன் எப்படி ஒரு பிள்ளை சமாளிச்சு நடப்பது! மாமி மருமகள் பிரச்சனை என்பதில் மருமகளை மட்டும் தவறு செய்கிறார் என்று சொல்வது தவறு. மருமகள் தனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என ஆணவம் கொள்ளும் மிரட்டும் மாமிமார்களிலும் மிகபெரிய தவறு இருக்கிறது.
எனவே, வயதில் பெரியவர்களே! நீங்களும் கொஞ்சம் புரிஞ்சு கொண்டு செயற்படுங்கள். எல்லாவற்றிற்கு சிறிய பிள்ளைகளை குறை சொல்வதை விடுத்து உங்களை நீங்கள் திருத்தினீர்கள் என்றால் உங்களை பார்த்து வளரும் சந்ததியினர் நன்றாக வளர்வார்கள். அதன் மூலம் ஒரு சமூகம் சமூகம் சார்ந்த நாடு அனைத்தும் நல்வழிப்படுத்தப்படும்.
நினைவேறுகிறது…