பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளை இந்திய மக்கள் அனைவரும் தமக்கு சுதந்திரம் கிடைத்த சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அரசவிடுமுறை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப்பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார். அன்று சுதந்திரபோராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து மரியாதையும் செலுத்தும் ஒரு உத்தம நாள்.
இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொரு இந்தியனதும் கடமை. அன்றைய நாளில் ஒவ்வொரு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் பாடப்பட்டு இனிப்பு வழங்கி தமது சுதந்திரத்தை மக்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாமும் எமது அலுவலகம் சார்பாக சென்னையிலுள்ள வெப்துனியா.கொம் எனும் எமது அலுவலகத்தில் சுதந்திர தினத்தை கொண்டாட ஒழுங்குகளை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
மாலை 4மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிப்பதற்காக நாம் உத்தேசித்து இருந்தோம். இருப்பினும் எமது வெப்துனியா.கொம் ஆசிரியர் திரு. அய்யநாதன் அவர்களிற்கு வெளி வேலை இருந்ததால் அதை 3.30 நிமிடங்களாக நாம் குறைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் துரிதமாக செயற்பட்ட எமது குழுவினர் வெப்துனியா.கொம் உடைய வைபக மண்டபத்தில் இந்திய தேசியக்கொடியை கோலமிட்டு குத்துவிளக்கு வைத்து ஒழுங்குகள் செய்து முடித்தனர். அதன் பின்னர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி சுதந்திரதினத்தை கொண்டாட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ஆரம்பநிகழ்வாக ஆசிரியர் திரு. அய்யநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். அவரைத்தொடர்ந்து ஆசிரியர் திரு.அவினாஷ், ஆசிரியர் திரு. வெங்கடேஸ்வர ராவ் அவர்களும் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வை இனிதே ஆரம்பித்து வைத்தனர். இவர்களை தொடர்ந்து துணை மேலாளர் திரு.செல்வகுமார், வெம்துனியா.கொம் மனிதவளத்துறை அதிகாரி திருமதி. ராஜேஸ்வரி துணை ஆசிரியர் செல்வி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். குத்துவிளக்கேற்றிய பின்னர் இந்திய தேசிய கீதம் ஊழியர்கள் எல்லோராலும் பாடப்பட்டது.
தேசிய கீதம் முடிவடைந்த பின்னர் கையை உயர்த்தி உறுதியாக ஜெய்கிந்த் என்று உரத்து சொல்லப்பட்டது மிகவும் நன்றாக இருந்தது. வைபக மண்டபத்திற்கான எமது நிகழ்வுகள் முடிவுறும் தருணத்தில் எமது ஊழியர்கள் குழுக்குழுவாக படங்கள் எடுத்தனர். இதிலும் சிறப்பாக ஆண்கள் தனியாக படம் எடுத்தார்களோ இல்லையோ பெண்களால் தனியாக பெண்கள் மட்டும் நின்று படம் எடுக்கப்பட்டது. அதற்கு காரணம் வேற கூறப்பட்டது என்னவென்றால் கோலமிட்ட குழு தனியாக படம் பிடித்தோம் என்று. மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இறுதி நிகழ்வாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடந்தது. இந்த இனிப்புக்களை எடுப்பதற்காக எமது சாப்பாட்டு மண்டபத்திற்கு வந்து இனிப்புக்களை எல்லோரும் ஒன்றாக உண்டு மகிழ்ந்தோம்.
இத்துடன் எமது நிகழ்வுகள் நிறைவேறியது. ஒரு நிகழ்வு எனும்போது குறைபாடுகள் கண்டிப்பாக இருக்கும். இதை சுட்டிக்காட்டவேண்டியது எழுதுபவரின் கடமை என நான் நினைக்கிறேன். சுட்டிக்காட்டுவது ஒருவரை துன்பபடுத்துவதற்காக நிச்சயாமாக இருக்காது. இந்த தவறை மீண்டும் செய்யாமலிருப்பதற்காகவே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுவோம்.
நன்மைகள் என்று கூறும்பொழுது நடந்த நிகழ்வுகள் அனைத்துமே நன்மையாகவே இருந்தது. குறைபாடு எனும் பொழுது அன்றைய நிகழ்வில் எமது வெப்துனியா.கொம் முதன்மை மேலாளர் திரு. முருகேசன் பால்ராஜ் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்திய எமது உதவி ஊழியர்களை அழைத்து அவர்களை படம் பிடிக்க எமக்கு நினைவு வரவில்லை. அதனையும் விட மிகவும் பெரிய தவறு இந்த வைபகத்தில் எமது ஊழியர்கள் ஒருவர் கூட இந்த நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி ஒரு வசனம் கூட பேசவில்லை. அதாவது சுதந்திரதினம் கொண்டாடினோம் என்றதற்காக குத்துவிளக்கேற்றி இனிப்பு சாப்பிட்டோம் என்ற மாதிரி இருந்தது. மற்றும் ஊழியர்கள் அனைவரையும் வெள்ளை ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த போதும் பெரும்பாலானவர்கள் மாற்று நிற ஆடைகளே அணிந்திருந்தனர். அதையும் விட எங்கள் அலுவலகத்தில் மட்டுமல்ல இந்திய நாட்டில் பெரும்பாலானவர்களினால் விடப்படும் பெரும் தவறு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றதாக சுதந்திர தினம் கொண்டாடுபவர்கள் சுதந்திர தினம் என்பதை ஆங்கிலத்தில் எழுதுவது. இந்தியாவில் இருக்கும் ஏதாவது ஒரு மொழியில் எழுதுவதை விடுத்து ஆங்கிலத்தில் எழுதுவதிலிருந்து மறைமுகமாக புலப்படுவது இன்னும் முழுமையான சுதந்திரத்தை மக்கள் உணரவில்லை என்பதே.
இவ்வாறான நிறை குறைகளுடன் சிறப்பாக எமது அலுவலகத்தின் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் மாலை 5 மணி 30 நிமிடங்களிற்கு முடிவடைந்து எமது அலுவலக பணிக்காக மீண்டும் செயற்பட்டோம்.எனது நினைவில் இருக்கும் என் மனதை கவர்ந்த விடயங்களை இங்கே நான் பதித்திருக்கிறேன். மேலும் உங்கள் மனதை கவர்ந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் என் நினைவில் இல்லாதவற்றையும் எனக்கு நினைவூட்டு்வதற்காக கருத்துரையை பயன்படுத்துங்கள்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்