Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

சரஸ்வதி பூசை

மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள்

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜய தசமி என்றழைக்கப்படுகிறது.

இறுதி நாளான விஜய தசமியில் விவசாய பொருட்களான ஏர், கலப்பை என்பனவும் கல்விக்கான புத்தகங்கள் அவரவர்கள் தமது தொழிலகளின் மூலப்பொருட்களை வைத்து பூசை செய்து வழிபடுவார்கள். அதுமட்டுமல்லாது புதிதாக தொழில்கள் தொடங்குபவர்கள் இன்று தமது தொழிலை தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு அதாவது ஐந்து வயதை அடைந்த அடுத்த வருடம் பள்ளிக்கு செல்லும் மழலைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இந்த விஜய தசமியில் இடம்பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது. தமது கல்வியை எழுத்தில் தொடங்கலாம் என்பதை அரிசியில் குழந்தையின் கையை பிடித்து வயதில் மூத்த அறிவில் சிறந்த ஒரு ஆசானால் "அ, ஆ" என்ற தமிழின் உயிர் எழுத்துக்களை எழுதி காண்பித்து அன்பாக அதை உச்சரித்தும் சொல்லுவதற்கு சொல்லி கொடுத்து அவர்களுக்கு அரிச்சுவடி மற்றும் எழுதி பார்ப்பதற்கான பயிற்சி புத்தகம், பென்சில் என்பன கொடுத்து விடுவார்கள். மாணவர்கள் அவருக்கு தட்சனை கொடுப்பார்கள்.

உண்மையில் அந்த நிகழ்வு ஒரு கிடைத்தற்கரிய நிகழ்வு என்று கூட சொல்லலாம். எனக்கு ஏடு தொடக்கியது எனக்கு நினைவில்லை. எனினும் ஒட்டுசுட்டான் முன்னாள் அதிபர் திரு சிவசெம்பு ஆசிரியர் அவர்கள் ஏடு தொடக்கியதாக பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். இப்போது இறந்துவிட்டார். கடந்த சில தினங்களாக அவரின் நினைவுகள் என்னை தொட்டு விட்டு செல்வதை உணரக்கூடியாதக உள்ளது. சிறுவயதில் அவர் எனக்கு ஆசையாசையாக வாங்கி கொடுத்த சின்ன சைக்கிள் நினைவு வரும்போதெல்லம் அவரும் நினைவு வருவார். சிறுவயது முதல் பாடசாலை முதன்மை மாணவியாக திகழ்ந்ததும் காலத்தின் கோலத்தால் இடையில் அறிவு சிதைவடைந்தது துன்பத்தை ஏற்படுத்தினாலும் இன்னும் வயதிருக்கின்றது என்ற நம்பிக்கை மனதை இன்பக்கடலில் மிதக்க வைக்கின்றது.

ஈழத்தில் சரஸ்வதி பூசையின் பத்து நாட்களும் பள்ளிகளிலும் கோயில்களிலுமே விசேடமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். தொழில் நிலையங்களில் பெரும்பாலும் கடைசி நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள். இரண்டு மூன்று வகுப்பறைகள் சேர்ந்து ஒரு நாள் எனும் ரீதியில் பள்ளியின் சகல வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இதில் கலந்து கொள்வது முக்கியமானதாகும். கடைசி நாள் அவல், சுண்டல், பொங்கல், வடை, என்று பாடசாலையில் மாணவர்களாகிய நாம் செய்து பரிமாறுவது வழக்கம். எப்படி என்றால் பாடசாலையில் உயர்தரம் படிப்பவர்கள் பள்ளி படிப்பை முடித்து கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இதை ஒழுங்கு செய்து ஆசிரியர்களின் துணையுடன் ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வொரு உணவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமைத்து பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் அதிபர் எல்லோரும் பரிமாறுவோம்.

விஜய தசமி முதல் நாள் சரஸ்வதிதேவிக்கு விழா எடுக்கும் இறுதி நாள் மாலை நான்கு ஐந்து மணியளவில் பாடசாலைக்கு வந்து அடுத்த நாள் சமையலுக்கு தேவையான விறகு, பாத்திரங்கள், பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து சமையல் செய்யப்போகும் இடமெல்லாம் துப்பரவு செய்துவிட்டு விளையாடியும் விட்டு வீட்டுக்கு போய் காலை எட்டு மணியளவில் பாடசாலைக்கு வந்து சமைக்க தொடங்கி மதியம் பன்னிரண்டு மணியளவில் சமையல் முடித்த பின்னர் வழமையான எமது கலாசார மண்டபத்தில் பூசைகள் தொடங்கப்பட்டு சரஸ்வதி பூசை தொடங்கிய நாள் வைக்கப்பட்ட கும்பம் பள்ளியின் கிணற்றுக்குள் சரிக்கப்பட்டு அந்த அந்த நீரை பள்ளியின் முழுபாகமும் தெளித்து சமைத்த சமையல்கள் கடவுளூக்கு படைக்கப்பட்டு வெள்ளை புடவை கட்டிய மாணவிகள் சகலகலாவல்லி மாலை பாடல் பாடுவார்கள். (இந்த நிகழ்வின் சரியான ஒழுங்கு முறை எனக்கு தெரியவில்லை. மன்றத்தின் பொருளாளராக இருந்ததால் வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக கவனிக்க முடியல்லை.)

பின்னர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒரு வகுப்பில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம் இருக்கவேண்டும் சிறப்பாக இருக்கவேண்டும். இல்லையேல் பள்ளியின் ஆசிரியருக்கு அன்று அதிபரால் பிரசங்கம் கொடுக்கப்படும். கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் ஏடு தொடக்கும் வைபவம் பள்ளியின் அதிபரால் நிகழ்த்தப்படும். பின் பிரசாதம் பரிமாறப்படும். அன்று பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலாச்சார உடையுடன் சமூகமளிக்கவேண்டும் என்பது பள்ளி அதிபரின் கட்டாய உத்தரவாகும்.

வீரம், செல்வம், கல்வி வேண்டி மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் இந்த விழா தமிழர்களின் சிறப்பான விழாக்களில் ஒன்று. கலாசாரத்திற்கு புகழ்பெற்ற இந்தியாவில் ஊடகங்களில் மட்டும் காணப்படுவது கவலைக்குரிய விடயம் தான்.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு